இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Nov 2025 6:01 PM IST
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
தூத்துக்குடி: டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடிக்கு உள்வாங்கியது. திருச்செந்தூர் கோவில் முன் கடல் உள்வாங்கி கடற்பாசிகள் கரை ஒதுங்குவதால் நீராட பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 28 Nov 2025 5:34 PM IST
டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டித்வா புயலின் வேகம் தற்போது 3 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயலானது இலங்கை திரிகோண மலையிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Nov 2025 4:57 PM IST
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.இந்தியாவின் INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கூடுதல் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 28 Nov 2025 4:06 PM IST
தீண்டாமை வன்கொடுமை:பெண் உள்பட ஆறு பேருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தொடர்பான வழக்கில் பெண் உள்பட ஆறு பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையலராக பணியாற்ற விடாமல் தடுத்ததாக 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பள்ளியில் சமையலராக பாப்பாள் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆதிக்க சாதியினர் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்தனர்.
- 28 Nov 2025 4:04 PM IST
அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது - மாணிக்கம் தாகூர்
கண்ணுக்கு முன்னால் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. அழிவின் ஒரு பகுதியாக செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றிருப்பதை பார்க்க முடிகிறது. அதிமுக காரர்கள் தவெகவிற்கு செல்வது இது துவக்கம்தான். இன்னும் பல பேர் சொல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என விருதுநகர் காங். எம் பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
- 28 Nov 2025 3:57 PM IST
இன்ஸ்டாகிராம் மூலம் கொடைக்கானல் சிறுமியுடன் பழகி, அவரை திருமணம் செய்து, வாழ்க்கையை சீரழித்த சென்னை வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
- 28 Nov 2025 3:41 PM IST
பாஜகவின் பி டீம் ரகுபதி - பொன்.ராதாகிருஷ்ணன்
திமுகவில் என்னென்ன நடந்து வருகிறது என்பதை எங்களுக்கு தகவல் தருபவர் அமைச்சர் ரகுபதிதான் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- 28 Nov 2025 3:39 PM IST
ஸ்லீப்பர் பெட்டிகளில் தலையணை, போர்வை -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ரெயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு ஜன.1ம் தேதி முதல் தலையணை மற்றும் போர்வைகளை, கட்டண அடிப்படையில் வழங்கப் போவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தலையணை, தலையணை கவர், போர்வை மொத்தமாக சேர்த்து ரூ.50 கட்டணமாக நிர்ணயம். போர்வை மட்டும் பெற ரூ.20 கட்டணம். முதற்கட்டமாக 10 ரெயில்களில் இச்சேவை அறிமுகமாகிறது.
- 28 Nov 2025 3:35 PM IST
ஹவாலா பணம் பறிமுதல்
காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் ரூ.62.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3000 ஊதியத்திற்காக ரூ.62.50 லட்சம் ஹவாலா பணத்தைக் கொண்டு வந்த கல்லூரி மாணவர் பிடிபட்ட நபர் மற்றும் பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுக்க கூறியதாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- 28 Nov 2025 3:31 PM IST
சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை
கடலூர்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.



















