பிறந்தநாள் அன்று சோகம்: சுடுகாட்டில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை

வேலூரில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர், கஸ்பா வசந்தபுரம் பொன்னிநகரை சேர்ந்தவர் வேல்முருகன் (39 வயது). இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ் (11 வயது), சாத்விக் (8 வயது) என 2 மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் வேல்முருகன் கஸ்பாவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
விபத்து ஏற்பட்டதில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமலும், இதனால் அவர் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது 3 சக்கர வாகனத்தில் வசந்தபுரம் சுடுகாட்டு எரிமேடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
வேல்முருகன் இரவில் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வசந்தபுரம் சுடுகாடு வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் எரிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தெற்கு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அதில் இறந்து கிடந்தவர் போலீஸ் ஏட்டு வேல்முருகன் என்பது தெரியவந்தது. பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நேற்று முன்தினம் வேல்முருகனுக்கு பிறந்தநாள். அவர் மதுகுடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து அவர் சுடுகாட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது இறப்புக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.






