ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி


ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
x

ஓசூரில், லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த, 3 மாணவர்கள் பலியாகினர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியை சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரி. இவருடைய மகன் மதன் (வயது 14). இவன் மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். மிடிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் பீரேந்திரசிங். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் ஆரியன் சிங் (13). இவனும் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்பாபு. தனியார் பள்ளி டிரைவர். இவருடைய மகன் ஹரீஷ் (14). இவன் அந்திவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவர்கள் மதன், ஆரியன் சிங், ஹரீஷ் ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

நேற்று மதன் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. ஆரியன் சிங்கும், ஹரீசும் பள்ளிக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை மதன் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி அருகில் வந்தான். அங்கு ஆரியன் சிங்கை ஏற்றிக் கொண்டு அந்திவாடி சென்றான். அங்கு ஹரீசை ஏற்றிக் கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.மத்திகிரி கூட்டு ரோடு பக்கமாக அவர்கள் வந்த போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் ஆரியன்சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தான்.

மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதன், ஹரீஷ் ஆகிய 2 பேரும் வழியிலேயே இறந்தனர். இதனால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் 3 மாணவர்கள் பலியான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அனில் அக்ஷய் வாகரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதே போல போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ் செல்வராசு (மத்திகிரி), நாகராஜ் (ஓசூர் டவுன்), சுப்பிரமணி (அட்கோ) ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓசூர் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story