தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற அரசு பேருந்து டிரைவர், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்திமாலா கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் கார்த்திகைபுரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன்(38), தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன்(21) ஆகிய 2 பேரும் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 20 சவரன் நகைகளை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.






