ஆம்புலன்சுக்கு வழி விட கூறிய விஜய்... அப்போது நடந்த சம்பவம்

விஜய் பேசும்போது, 6 மாதங்களில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும் என பேசினார்.
கரூர்,
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார். அதன்பின்னே மற்றொரு ஆம்புலன்சும் சென்றது.
அப்போது, அந்த ஆம்புலன்சின் உட்புறம் முன்பகுதியில், த.வெ.க. கொடி வைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனித்த விஜய், என்ன ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் போகுது என கூறினார். அ.தி.மு.க. அரசியல் கூட்டத்தின் இடையேயும் இதுபோன்று ஆம்புலன்ஸ் சென்று அது சர்ச்சையானது. ஆம்புலன்ஸ் செல்ல கூடிய இடத்தில் பிரசார அனுமதி கொடுத்ததும் மறுபுறம் சர்ச்சையானது.
இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல் கொள்ளை, மணல் குவாரி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட உள்ளூர் விசயங்களில் அதிக கவனம் செலுத்தி பேசினார். தொடர்ந்து அவர், 6 மாதங்களில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும் என்றும் பேசினார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை நிர்வாகிகள் தூக்கி சென்றனர். அவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ் வரிசையாக வந்தன. எனினும், கூட்ட நெரிசலால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்னர். அவர்களை பிரசார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள், சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.






