விருதுநகர்: மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

கோப்புப்படம்
மழைக்கு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முனியசாமி (27 வயது). இவர் இன்று காலையில் திருச்சுழியில் உள்ள குற்றவியல் கோர்ட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் மதியம் வீட்டுக்கு புறப்பட்டபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதையடுத்து அவர் கோர்ட்டு முன்பு உள்ள ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த பிச்சை (50 வயது), சரவணன் (27 வயது) ஆகியோரும் அங்கு நின்றிருந்தனர். திடீரென்று பலத்த மின்னல் வெட்டியது. அப்போது, வக்கீல் முனியசாமி உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






