"தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல..": மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்குமென முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான கட்டம் அமையவுள்ளது என்ற நேர்மறையான பார்வையுடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






