அதிமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் எம்.பி விளக்கம்


அதிமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் எம்.பி விளக்கம்
x

யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அதிமுக எம்.பி தர்மர் கூறினார்.

சென்னை,

ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர், எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து இருந்தபோது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆர். தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒன்றியச் செயலாளராக இருந்த தர்மருக்கு, ஓ. பன்னீர்செல்வத்தின் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளராக தர்மர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க முடிவுசெய்த தர்மர், அவரை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தர்மர் கூறியதாவது: “யாருடனும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதா கனவை நனவாக்க இணைந்தோம். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அதிமுக எம்பியாகவே நாடாளுமன்றத்தில் உள்ளேன்” என்றார்.


1 More update

Next Story