திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

கோப்புப்படம்
திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடி புல்லன்விளையை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிஷ் (30 வயது). இவர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் அபிசுக்கும் புதுச்சேரியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண் நடன கலைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அபிஷ் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண்ணுடன் பழகி வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அப்போது அபிஷ் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் திற்பரப்பு அருவி உள்பட பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை, அபிஷ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு அபிஷ் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அபிசிடம் தன்னை திருமணம் செய்ய கூறினார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






