6-வது குழந்தை பெற்ற நிலையில் கருத்தடை செய்ய மறுத்து பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்

கோப்புப்படம்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் 6-வது குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்ணை மருத்துவர் கருத்தடை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (33 வயது) கொத்தனார். இவரது சொந்த ஊர் வேலூர். மாமியார் ஊரான சோமங்கலம் பகுதியில் அவரது மனைவி மங்கை (31 வயது) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.
3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 6-வதாக கர்ப்பம் தரித்த மங்கை, பிரசவத்திற்காக, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மதியம், மங்கைக்கு 6-வதாக ஆண் குழந்தை பிறந்தது.
6 குழந்தைகள் பெற்ற நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மங்கையிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பயந்துகொண்டு குழந்தையை தவிக்க விட்டு மருத்துவமனையில் இருந்து குழந்தையின் தாய் மங்கை மாயமானார். இதற்கிடையில், மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததை அடுத்து, தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அறுவை சிகிச்சைக்கு பயந்து, குழந்தையை தவிக்கவிட்டு மாயமான மங்கையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மங்கை சோமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். உடனே இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு மங்கையின் கணவர் ராஜ்குமார் தகவல் தெரிவித்தார். உடனே அவரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தாயை பிரிந்து குழந்தை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மங்கையிடம் ஒப்படைத்தனர். 6 குழந்தைகள் பெற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மறுத்து தனது 6-வது குழந்தையை தாய் தவிக்க விட்டுச்சென்ற சம்பவம் தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






