12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து,இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி , கோவை, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






