நீலகிரியில் காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சத்தம் போட்டதால், யானை ஒரு வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடை பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 35) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குந்தா பாலம் பகுதியில் இருந்து கெத்தைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மலைப்பாதையில் கூட்டத்துடன் சென்ற காட்டு யானை ஒன்று, பின்னோக்கி வந்து காரை திடீரென வழிமறித்து தாக்கி தள்ள முயன்றது.
அப்போது கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி காருக்கு உள்ளேயும், வெளியேயும் விழுந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சத்தம் போட்டனர். மேலும் அந்த நேரத்தில் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சத்தம் போட்டதால், யானை ஒரு வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் குழந்தையுடன் காரில் இருந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து குந்தா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






