கிளி ஜோசியரை தொடர்ந்து குடுகுடுப்பைக்காரரிடம் ஆசி பெற்ற தங்கர்பச்சான்


கிளி ஜோசியரை தொடர்ந்து குடுகுடுப்பைக்காரரிடம் ஆசி பெற்ற தங்கர்பச்சான்
x

குடுகுடுப்பைக்காரருக்கு சால்வை போர்த்தி தங்கர்பச்சான் ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட தங்கர்பச்சான், அங்குள்ள ஒரு கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருப்பதாக ஜோசியக்காரர் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதனைத் தொடர்ந்து தங்கர்பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி ஜோசியரை வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தங்கர்பச்சான் இன்று பண்ருட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு ஒரு குடுகுடுப்பைகாரரை தங்கர்பச்சான் சந்தித்தார். அப்போது, "உங்களுக்கு நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது. நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள்" என்று குடுகுடுப்பைக்காரர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு சால்வை போர்த்தி தங்கர்பச்சான் ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.




Next Story