ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்


ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
x

வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி இரண்டாவதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, வருகிற 20-ம் தேதி 5-ம் கட்ட தேர்தலின்போது உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கோட்டையாக உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

அதேவேளை, காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் 2019 வரை எம்.பி. தேர்தலில் ராகுல்காந்தி வெற்றிபெற்று வந்தார். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார்.

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா? ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவாரா? என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அமேதி தொகுதியில் கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி இரண்டாவதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுதாக்கலின்போது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story