கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்


கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்
x
தினத்தந்தி 24 April 2024 9:17 AM GMT (Updated: 24 April 2024 11:21 AM GMT)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும், குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1. செய்ய வேண்டியவை

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும்:

* உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தாகம் நீரிழப்பின் ஒரு நல்ல குறியீடு அல்ல.

• பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள்.

* ஓ.ஆர்.எஸ். மற்றும் எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.

* முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.

உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணியவும்:

* வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

* உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள், சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பாரம்பரிய தலையை மூடும்பொருட்களை பயன்படுத்தவும்.

* வெயிலில் வெளியே செல்லும் போது காலணிகளை அணியவும்.

முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்:

* நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும்.

* வெளியில் செல்வதாக இருந்தால், உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை நாளின் குளிர்ச்சியான நேரங்களுக்குள் மேற்கொள்ளவும், அதாவது காலை மற்றும் மாலை.

2. செய்யக்கூடாதவை

* நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை.

* மதியம் வெளியில் செல்லும்போது கடினமான செயல்களை தவிர்க்கவும்.

* வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

* நண்பகலில் சமைப்பதைத் தவிர்க்கவும் சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்றோட்டம் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும்.

* ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் கூடுமானவரை தவிர்க்கவும். இவை உண்கையில் அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் இல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம்.

* புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும். பழைய உணவுகளை உண்ண வேண்டாம்.

* நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகளையோ செல்லப் பிராணிகளையோ விடாதீர்கள். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம்.

கடுமையான கோடை வெயிலின் பாதிப்புகளை எதிர் கொள்வதற்காக அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இதற்கான சிகிச்சை அளிப்பதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒ.ஆர்.எஸ். கரைசல் கொடுப்பதற்கு தனியே இடம் (ORS Corner) அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story