4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து

image courtesy:ICC
இங்கிலாந்து தற்போது வரை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பேட்டிங் செய்து வருகிறது.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், பென் டக்கட் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இந்த இன்னிங்சில் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்திய முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. பென் டக்கட் - கிராவ்லி கூட்டணி போல ஜோ ரூட் - ஆலி போப் கூட்டணியும் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து முன்னிலையை நோக்கி பயணிக்கிறது.
உணவு இடைவேளைக்கு முன்பு வரை இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 332 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 63 ரன்களுடனும், ஆலி போப் 70 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப்பின் இந்திய பந்துவீச்சை வாஷிங்டன் சுந்தர் தொடங்கினார். அவரது பந்துவீச்சில் ஆலி போப் (71 ரன்கள்) மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் (3 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அடுத்தது ஜோ ரூட்டுடன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இங்கிலாந்து அணி தற்போது வரை 87 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் அடித்து பேட்டிங் செய்து வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






