4-வது டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த இந்தியா


4-வது டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த இந்தியா
x

image courtesy: Englandcricket twitter

இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல். ராகுலும் களம் புகுந்தனர். இங்கிலாந்தின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ராகுல் 46 ரன்களில் கேட்ச் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நிதானத்தை கடைபிடித்தார். மறுமுனையில் தனது 12-வது அரைசதத்தை அடித்த ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் (12 ரன்) நிலைக்கவில்லை. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஷாட் பிட்ச் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி 5-வது விக்கெட்டை பறிகொடுத்தது. இன்றைய நாளின் 2-வது ஓவரை (85-வது ஓவர்) இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, 2-வது ஸ்லிப் பகுதியில் நின்ற ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே அடித்த ஜடேஜா 20 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியுள்ளார்.

1 More update

Next Story