ஆசிய கோப்பை: பிளேயிங் லெவனில் அவர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை: பிளேயிங் லெவனில் அவர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலைக் கொடுப்பதாக மதன் லால் தெரிவித்துள்ளார்.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வரும் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாக உள்ளது. ஏனெனில் அந்த அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலைக் கொடுக்கும் அணியாக இருக்கிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.

குல்தீப் யாதவின் தனித்துவமான பந்துவீச்சு பாணி காரணமாக அவர் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். அவரது பந்துவீச்சை டி20 கிரிக்கெட்டில் எதிர்கொள்வது கடினம். அவருடைய தேர்வு பற்றிய இறுதி முடிவு பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும். துபாயில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்” என்று கூறினார்.

1 More update

Next Story