ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இந்தூரில் பாலியல் தொல்லை.. அதிர்ச்சி சம்பவம்

கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தூர்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு 2 வீராங்கனைகள் நடந்து சென்றனர். அப்போது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு (தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது) வேகமாக சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீராங்கனைகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் இந்த சம்பவம் நடந்தபோது அருகில் இருந்த ஒருவர் அந்த 2 பேர் தப்பிச்சென்ற வாகன எண்ணை கூறினார். இதனையடுத்து விசாரணையை துரிதமாக மேற்கொண்ட போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட இந்தியா வந்துள்ள வீராங்கனைகளுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






