மந்தனாவுக்கு துரோகம் செய்தாரா பலாஷ் முச்சல்..? லீக் ஆன 'ஸ்கிரீன்ஷாட்’.. வெடித்த சர்ச்சை

மந்தனாவுக்கும் அவரது காதலரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த 23-ம் தேதி நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
image courtesy: instagram/palash_muchhal
image courtesy: instagram/palash_muchhal
Published on

சாங்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். மந்தனா- பலாஷ் முச்சால் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்தது. இதற்காக தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. திருமணத்துக்கு முந்தைய முக்கிய சடங்கான மெஹந்தி விழாவும் நடைபெற்றது.

அந்த சூழலில் கிரிக்கெட் நட்சத்திரம் மந்தனாவின் திருமணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அவரது மேலாளர் துஹின் மிஷ்ரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

திருமணம் நடைபெற இருந்த 23-ந் தேதி அன்று மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே ஸ்மிருதியின் தந்தையைத் தொடர்ந்து, அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து அழுது கொண்டிருந்த பலாஷ்-க்கு திடீரென உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது நலமாக இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

மேரி டிகோஸ்டா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பலாஷ் முச்சலுடன் செய்த சாட்டிங்கை பகிர்ந்துள்ளார். இருப்பினும் இது உண்மையானவையா? அல்லது போலியானவையா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் பேசுபொருளாகி உள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது நீக்கிவிட்டார். நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதனிடையே பலாஷ் முச்சலின் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாக, ஸ்மிருதி - பலாஷின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com