ஐ.பி.எல். 2026: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் சமீபத்தில் விலகினார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஜெய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ரசல், பதிரானா, மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இவர்கள் ஏலத்தில் இடம்பெற உள்ளனர். இதனால் அடுத்த சீசன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து காணப்படுகிறது.

அதுபோக ஐ.பி.எல். அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அணிகளை வலுவாக கட்டமைக்கும் நோக்கில் நிர்வாகங்கள் பல மாற்றங்களை செய்து வருகின்றன.

அந்த வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்நிலையில் டிராவிட்டுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

அவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பிறகு அந்த அணியின் இயக்குனராக செயல்பட்ட அவர் எதிர்வரும் சீசனில் (2026) இருந்து மீண்டும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com