ஐ.பி.எல். ஏலம்: சிஎஸ்கே அணி இந்த 2 வீரர்களை குறி வைக்கலாம் - அஸ்வின் கணிப்பு

ஐ.பி.எல். மினி ஏலம் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டோனி, டிவால்ட் பிரேவிஸ், ஊர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் முகமது, கலீல் அகமது, அன்ஜூல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எலிஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.

கடந்த சீசனில் சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 10-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக சரியான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தும் நோக்கில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சி.எஸ்.கே நிர்வாகம் வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- இந்த மினி ஏலத்தில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக தேவை இருக்கும். அந்த வகையில் உமேஷ் யாதவுக்கு அதிக கொகை கிடைக்கக்கூடும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும் உரிமையாளர்களிடம் நிறைய பணம் உள்ளது. மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகியுப் நபி போன்ற ஒருவருக்கு தேவை இருக்கும். ஆனால் அவர் தேர்வு செய்யப்பட்டு விளையாடுவாரா என்பது எனக்குத் தெரியாது. சி

எஸ்கே அவரைத் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் அவரை ஒரு பேக்கப் பந்துவீச்சாளராக வைத்திருப்பார்கள். சிஎஸ்கேவின் முதல் முன்னுரிமை வெங்கடேஷ் ஐயர்தான். அவர்கள் முதலில் மேக்ஸ்வெல்லை நினைத்திருப்பார்கள். இப்போது அவர் வெளியேறிவிட்டதால், லியாம் லிவிங்ஸ்டனை வாங்கவும் சி.எஸ்.கே அணி முயற்சிக்கும் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com