பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: விராட் கோலியின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா - விவரம்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: விராட் கோலியின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா - விவரம்
x

Image Courtesy: @BCCI

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா முன்னாள் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா நிகழ்த்திய சாதனை என்னவெனில்,

நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 13 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களுக்குள் 30 ரன்களை விளாசிய முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் துவக்க வீரராக விராட் கோலி கடந்த 2022-ம் ஆண்டு துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 29 ரன்கள் குவித்திருந்தார். அதேபோன்று ரோகித் சர்மாவும் அதே 2022-ம் ஆண்டு துபாய் மைதானத்தில் 28 ரன்களை குவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரை தாண்டி பவர்பிளே ஓவர்களுக்குள்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 30 ரன்கள் அடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story