பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் கூறியது என்ன..?


பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: ஆட்ட நாயகன் குல்தீப்  யாதவ் கூறியது என்ன..?
x
தினத்தந்தி 15 Sept 2025 7:18 AM IST (Updated: 15 Sept 2025 7:20 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், “எளிமையாக, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். யார் பேட்டிங் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். என்னிடம் திட்டங்கள் இருந்தன, நான் அவற்றை செயல்படுத்தினேன். முதல் பந்து எப்போதும் விக்கெட் எடுக்கும் பந்தாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடன் சென்று வீச வேண்டும். இன்னும் என் பவுலிங்கில் நிறைய வேலை செய்ய வேண்டும் என்று உணர்கிறேன். சில நேரங்களில் நான் அதிகமான வேரியேஷன்களைப் பயன்படுத்துவதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story