ரோகித்துக்கு எதிராக 176.5 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய ஸ்டார்க்..? உண்மை என்ன..?

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக நேற்று முன்தினம் நடந்தது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் கால் பதித்தனர்.

மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டு நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி டக்-அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை விரட்டிப்பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு பந்து மணிக்கு 176.5 கி.மீ. வேகத்தில் சென்றதாக கணக்கிடும் கருவி காட்டியது. இதனால் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகத்தில் பந்துவீசிய அக்தரின் சாதனையை ஸ்டார்க் முறியடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் வேகத்தை கணக்கிடும் கருவியில் ஏற்பட்ட பிழை ஸ்டார்க் வீசிய பந்தின் வேகத்தை அதிகரித்து காட்டிவிட்டதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இதனால் கிரிக்கெட்டில் அக்தர் வீசிய 161.3 கி.மீ. வேகமே அதிகபட்ச பந்துவீச்சு வேகமாக தொடர்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com