விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ் - எதில் தெரியுமா?

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 சர்வதேச தொடரை கூட இழந்ததில்லை.
சென்னை,
இந்தியா-நியூசிலாந்து இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீத்தியது.
கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது, இதில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கேப்டனாக 50 வெற்றிகளுடன் ரோகித் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 42 வெற்றிகளுடன் தோனி உள்ளார்.
32 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் விராட் கோலி இருந்தார். தற்போது 33 வெற்றிகளுடன் விராட் கோலியை சூர்யகுமார் யாதவ் முந்தியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 சர்வதேச தொடரை கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா: 50 வெற்றிகள்
எம்.எஸ். தோனி: 42 வெற்றிகள்
சூர்யகுமார் யாதவ்: 33 வெற்றிகள்
விராட் கோலி: 32 வெற்றிகள்






