டெஸ்ட் கிரிக்கெட்: 3-வது ஆசிய பவுலராக மாபெரும் சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆலி போப் 71 ரன்களிலும், ரூட் 150 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ரா, முகமது சிராஜ், கம்போஜ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இங்கிலாந்து மண்ணில் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றிய 50-வது டெஸ்ட் விக்கெட் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது ஆசிய பவுலர் என்ற மகத்தான சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (53 விக்கெட்டுகள்) மற்றும் இந்தியாவின் இஷாந்த் சர்மா (51 விக்கெட்டுகள்) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.






