அதில் ஒன்றும் தவறில்லை - சூர்யகுமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் ஆதரவு

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையானது.
மும்பை,
நடப்பு ஆசிய கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.
இதனை பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ‘பன்றி’ உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அட்டவணை அறிவிக்கப்பட்ட படி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. ஆனால் கை குலுக்குவதை பொறுத்தவரை அது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம். அவர் அந்த முடிவை எடுத்துள்ளார் அதில் ஒன்றும் தவறில்லை” என்று ஆதரவு கொடுத்துள்ளார்.






