மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @BCCIWomen
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களம் இறங்கும். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பெற அயர்லாந்து அணி போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.