மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

Image Courtesy: @BCCIWomen
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் எல்லிஸ் பெர்ரி 105 ரன், ஜார்ஜியா வோல் 101 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சைமா தாகோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்தியா 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 249 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா ஹோஷ் 54 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.






