ஒலிம்பிக்கில் வெண்கலம்; வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் - இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவிப்பு

Image Courtesy : AFP
வெண்கலம் வென்ற ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக இந்திய ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப்பைச் சேர்ந்த ஆக்கி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெண்கலம் வென்ற ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.






