சென்னை ஓபன் டென்னிஸ்: டோனா வெகிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
2-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சஹஜா யாமலபள்ளியை (இந்தியா) எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதே போல் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் கிம்பெர்லி பிரெலிடம் (ஆஸ்திரேலியா) பணிந்தார். இதன் மூலம் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. அரினா ரோடினோவா (ஆஸ்திரேலியா), போலினா லேட்சென்கோ (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் தியா ரமேஷ்- லட்சுமி பிரபா ஜோடி 3-6, 7-5, 8-10 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ததியானா புரோஜோரோவா- எகதெரினா யாஷினா இணையிடம் போராடி வீழ்ந்தது. பிரார்தனா தோம்ப்ரே (இந்தியா)- அரியானே ஹர்டோனா (நெதர்லாந்து) ஜோடியும் முதல் சுற்றுடன் நடையை கட்டியது.






