அப்பல்லோ 11 விண்கலம்


அப்பல்லோ 11 விண்கலம்
x

அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனில் இறங்கிய முதல் ஆளேற்றிய பயண திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5-வது ஆளேற்றிய பயண திட்டமாகும்.

இது ஜூலை 16, 1969-ல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969-ல் மீண்டு்ம் பூமிக்கு திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளை கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திர கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

ஜூலை 20-ல் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.

சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்பு புகைப்படங்களில் காணப்பட்டது போலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறை பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்க கட்டுப்பாட்டை கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப்பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.

இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்த பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது மனிதனை பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பெரிய பாய்ச்சலாகும்.

21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் எந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24-ல், பூமிக்கு திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.

இத்திட்டத்தின் கட்டளை கூறு வாஷிங்டன், டி.சி.யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21, 1969-ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை.


Next Story