ஆசியாவிலேயே தூய்மையான நதி


ஆசியாவிலேயே தூய்மையான நதி
x
தினத்தந்தி 21 April 2023 1:45 PM GMT (Updated: 21 April 2023 1:45 PM GMT)

சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் மாசு காரணமாக நிலம், நீர், காற்று, ஆகாயம், இயற்கை உள்பட அனைத்து பரப்புகளும் பாதிப்படைந்து உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. நிலத்துக்கு அடியில் இருந்து கூட தூய்மையான தண்ணீரை பெற முடியாத நிலை இருக்கிறது.

அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினை விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் உள்பட பல்வேறு வகை கழிவுகள் கலந்து மாசுவின் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் தூய்மையான நதியை தேடி பார்ப்பது என்பது சவாலானது.

கண்ணாடி போல் தெளிந்த நீரோட்டம் கொண்ட தண்ணீரை பார்ப்பது ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நதி ஒன்று இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் தூய்மையான நதிகளுள் ஒன்றாக விளங்கும் இது ஆசியாவிலேயே தூய்மையான நதியாகவும் வர்ணிக்கப்படுகிறது. அந்த நதியின் பெயர் உம்ங்கோட்.

டாவ்கி நதி என்றும் அழைக்கப்படும் இந்த நதி மேகாலயா மாநிலத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் உள்ள ஷில்லாங் சிகரத்தின் கிழக்கு பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறது. வங்காள தேசத்தையொட்டி இந்தியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம்தான் இந்த நதியின் தாயகம். நதியை போலவே இந்த கிராமமும் தூய்மைக்கு பெயர் பெற்றது. அதனால்தான் ஆசியாவின் தூய்மையான கிராமமாகவும் அறியப்படுகிறது.

இந்த கிராம மக்கள் நதியை மாசு அடையாமல் பாதுகாத்து வருகிறார்கள். அதனால் நீரின் மேற்பரப்பில் இருந்து சில அடி தூரம் வரை தண்ணீர் தெளிவாக தெரிவதை கண் கூடாக பார்கலாம். நதிக்குள் இருக்கும் பாறைகள், கூழாங்கற்கள், மீன்கள் மற்ற நதிகளில் காட்சி அளிப்பதை விட பிரகாசமாக கண்களுக்கு புலப்படும்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது பச்சை நீல நிறத்தில் இந்த நதி அழகுற காட்சி அளிக்கும். இந்த நதியில் படகு சவாரியும் நடத்தப்படும். தண்ணீரின் பளிச் தன்மை காரணமாக படகின் நிழல் ஆற்றில் தெரிவதும் கூட தெளிவாக இருக்கும். படகுகள் ஆற்றில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த நதியில் படகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அமைதியாக ஓடும் இந்த நதி 82 கி.மீ. தூரம் தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. சுற்றுப்புற பகுதியில் 800 சதுர கி.மீ. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கிறது.

உம்ங்கோட் நதிக்கு அருகில் உள்ள முக்கியமான நகரம் டவ். அங்குள்ள பாலம் மற்றும் அண்டை நாட்டின் இனிமையான காட்சிகள் மற்றும் நதியை சூழ்ந்திருக்கும் பசுமை கண்களுக்கு விருந்தளிக்கும்.


Next Story