அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யார் செல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, நான் செல்வேன் - ஹர்பஜன் சிங்


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யார் செல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, நான் செல்வேன் - ஹர்பஜன் சிங்
x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஆவார்.

சண்டிகர்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுதினம் (22ம் தேதி) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

அதேவேளை, அரசியல் நிகழ்வாகிவிட்டதால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், கெஜ்ரிவால் வரும் 23, 24ம் தேதிகளில் ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யார் செல்கிறார்கள்? யார் செல்லவில்லை? என்பது பற்றி கவலையில்லை. காங்கிரஸ் கட்சியினர் செல்கிறார்களோ? செல்லவில்லையோ? மற்ற கட்சியினர் செல்கிறார்களோ? செல்லவில்லையோ? அதுபற்றி கவலையில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நான் செல்வேன். கடவுள் நம்பிக்கை உள்ள என் தனிப்பட்ட முடிவு இது. கும்பாபிஷேகத்திற்கு நான் செல்வது யாருக்கேனும் பிரச்சினை இருந்தால் அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதை செய்யட்டும். இந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது நம் அதிர்ஷ்டம். ஆகையால், அங்கு சென்று கடவுள் ராமரின் அருளை பெற வேண்டும். கடவுள் ராமரின் அருளை பெற நான் கண்டிப்பாக கும்பாபிஷேகத்திற்கு செல்வேன்' என்றார்.


Next Story