ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம் - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்


ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம் - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்
x
தினத்தந்தி 11 Jan 2024 5:40 AM GMT (Updated: 11 Jan 2024 6:00 AM GMT)

பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து அயோத்திக்கு செல்லும் முதல் விமானம் என்பதால் ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story