போர்க்கள காட்சிகளுடன் தயாராகும் சரித்திர படம்


போர்க்கள காட்சிகளுடன் தயாராகும் சரித்திர படம்
x

`யாத்திசை' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் ஷக்தி மித்ரன், சேயோன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரகுமார், சுபத்ரா, செம்மலர் அன்னம், சமர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``சங்கத்தமிழர் வாழ்வியலையும் போர்முறைகளையும் கண்முன் நிறுத்தும் வகையில் சரித்திர படமாக தயாராகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியன் மன்னனுக்கும், எயினர்கள் எனப்படும் பழங்குடி கூட்டத்துக்கும் இடையே நடந்த போராட்டத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

`நவகண்டம்' என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை பலி, தேவரடியாரின் வாழ்க்கை முறை, சிற்றரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த திருமணம் உள்ளிட்ட உறவு முறைகள் ஆகியவை குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு அவை பற்றிய காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது. வீனஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்'' என்றார். ஒளிப்பதிவு: அகிலேஷ் காத்தமுத்து, இசை: சக்கரவர்த்தி.


Next Story