திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - நடிகை கஸ்தூரி சர்ச்சை டுவிட்


திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - நடிகை கஸ்தூரி சர்ச்சை டுவிட்
x

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி போட்டுள்ள டுவீட் தற்போது கவனம் பெற்றுள்ளது.

சென்னை

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

இவ்விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இவ்விவகாரம் எதிரொலித்தது. தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

தொடக்கத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக காவல்துறை இந்தியிலேயே விளக்கம் அளித்து டுவீட் பதிவிட்டது. மேலும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரையும், அம்மாநில காவல்துறையியும் டேக் செய்து, பீகார் மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தது.

இருப்பினும், இங்குள்ள வட மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அதனால் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் படையெடுத்துள்ளதாகவும் செய்திகள் வாயிலாக தகவல்கள் பரவுகின்றன.

இதனால், பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. டுவிட்டரில் இது தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் சூழலில் நடிகை கஸ்தூரி போட்டுள்ள டுவீட் தற்போது கவனம் பெற்றுள்ளது.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை'' என்று கஸ்தூரி கூறியுள்ளார்.




Next Story