இரட்டை குழந்தைகளை பார்க்க நயன்தாரா வீட்டுக்கு சென்ற நடிகை ராதிகா


இரட்டை குழந்தைகளை பார்க்க நயன்தாரா வீட்டுக்கு சென்ற நடிகை ராதிகா
x

நடிகை ராதிகா சரத்குமார் சென்னை எழும்பூரில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு நேரில் சென்று குழந்தைகளை பார்த்தார்.

நடிகை நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். வாடகைத்தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத்தாய் சட்ட விதிமுறைகளை நயன்தாரா மீறி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் வாடகைத்தாய் விதிமுறையை நயன்தாரா மீறவில்லை என்று அரசு விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் குழந்தைகளை அருகில் இருந்து நயன்தாரா கவனித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சென்னை எழும்பூரில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு நேரில் சென்று குழந்தைகளை பார்த்தார்.

அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து அழகான குழந்தைகள் மற்றும் நயன்தாரா - விக்னேஷ் சிவனை பார்த்தது மகிழ்ச்சி என்று பதிவிட்டு வாழ்த்தும் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் ராதிகா போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story