நந்தினி, குந்தவை கதாபாத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், திரிஷா நெகிழ்ச்சி


நந்தினி, குந்தவை கதாபாத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், திரிஷா நெகிழ்ச்சி
x

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி, திரிஷாவின் குந்தவை கதாபாத்திரங்களுக்கு பாராட்டுகள்கிடைத்தன. இதனால் இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் திரிஷாவும் தங்கள் கதாபாத்திரங்கள் குறித்து பட விழாவில் நெகிழ்ச்சியோடு பேசினர்.

ஐஸ்வர்யா ராய் கூறும்போது, "பொன்னியின் செல்வன் எனது மனதுக்கு பிடித்த படம். மணிரத்னம் இயக்கிய நிறைய படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். அவை அனைத்துமே மனதுக்கு நிறைவை தந்தன. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு கொடுத்த நந்தினி கேரக்டர் ரொம்பவே ஸ்பெஷல். இது கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் மிகவும் பிடித்து போனது'' என்றார்.

திரிஷா பேசும்போது, "நான் நடித்த குந்தவை கதாபாத்திரத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது. குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதன் முதல் பாகம் வந்தபோது இளம் பெண்கள் குழந்தைகள் உள்பட பலர் குந்தவை போலவே ஆடை அணிந்து புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தனர். அந்த புகைப்படங்களில் சிலவற்றை நான் சமூக வலைதளங்களில் பதிவு செய்தேன். பிறந்த ஒரு சில நாட்களே ஆன குழந்தைக்கு குந்தவை மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார்கள். அது என்னை ஆச்சரியப்படுத்தியது" என்றார்.


Next Story