"நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுறவனா... பொழப்ப பாருங்க" - திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்...!


நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுறவனா... பொழப்ப பாருங்க - திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்...!
x
தினத்தந்தி 19 Nov 2023 5:57 AM GMT (Updated: 19 Nov 2023 6:24 AM GMT)

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், 'மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து ஆசைப்படலாம், ஆனால் அவரைப் போன்ற மோசமான ஒருவருடன் நான் நடிக்கவில்லை என்பதில் நான் நன்றாக உணர்கிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்' என்று தெரிவித்திருந்தார்.

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும் பல ரசிகர்கள், மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'அய்யா பெரியோர்களே.... திடீரென்று திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகளை அனுப்பினாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்தில், நான் வருகிற தேர்தலில் ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடுகிறேன் என்று சொன்ன வேளையில், வேண்டும் என்றே யாரோ கொம்பு சீவி விட்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த பெண்ணை உயர்வாகத்தான் சொல்லிருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'அனுமார் சிரஜ்சீவி மலையை கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டுவந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதில் இல்லை. எனது ஆதங்கத்தை காமெடியாக சொல்லிருப்பேன். அதை கட் பண்ணி பதிவிட்டு கலகம் பண்ண நினைத்தால் நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுறவனா...? யாரோ திரிஷாவிடம் தவறாக வீடியோவை காட்டி இருக்கிறார்கள்' என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர், 'அய்யா என்கூட நடிச்சவங்க எல்லாம் எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி ஆகிவிட்டார்கள். பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்களை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்கள். நான் எனது 2 பெண்களுக்கு கல்யாணம் பண்ணனும், 360 படங்களில் நடித்திருக்கிறேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பவன். அது எல்லாருக்கும் தெரியும். உலகத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்கிறது... பொழப்ப பாருங்கப்பா...." என்று பதிவிட்டுள்ளார்.


Next Story