கதாநாயகியாக பட்ட கஷ்டங்கள்... ரகுல் பிரீத் சிங் பகிர்ந்த சினிமா அனுபவம்


கதாநாயகியாக பட்ட கஷ்டங்கள்... ரகுல் பிரீத் சிங் பகிர்ந்த சினிமா அனுபவம்
x

நடிகை ரகுல்பிரீத்சிங்கும் சினிமாவில் முன்னேற பல துன்பங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

சினிமாவில் கதாநாயகி ஆவது எளிதான காரியம் அல்ல. மீறி வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்து நிலைத்து நிற்பதற்கு போராட வேண்டி இருக்கும். இப்போது திரையில் பிரபல நடிகைகளாக மின்னும் பலர் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டத்தையும், கசப்பான அனுபவங்களையும் சந்தித்து மேலே வந்தவர்கள். `தமிழில் தடையற தாக்க', `என்னமோ ஏதோ', `தீரன் அதிகாரம் ஒன்று', `தேவ்', `என் ஜி கே' படங்களில் நாயகியாக நடித்து தற்போது `அயலான்', `இந்தியன் 2' படங்களை கைவசம் வைத்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங்கும் சினிமாவில் முன்னேற பல துன்பங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார். அதன் விவரம்:-

``சிறு வயது முதலே சினிமாவிற்கு வர வேண்டும் என கனவு கண்ட பெண் நான். இண்டஸ்ட்ரி பற்றி ஒன்றுமே தெரியாத நாட்களில் மாடலிங்கில் இருந்து மிஸ் இந்தியா, பின்னர் அங்கிருந்து சினிமாவிற்கு வந்தேன். அனைவரையும் போலவே இந்த பயணத்தில் எத்தனையோ மேடு பள்ளங்கள், நிராகரிப்புகளை எதிர்கொண்டேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு குடும்பத்தை விட்டுவிட்டு மும்பையில் அடி எடுத்து வைத்து தனிமையான வாழ்க்கை வாழ்ந்தேன்.

அதுதான் நான் எடுத்த முக்கியமான முடிவு. ஆடிஷனுக்காக வரிசைகளில் நிற்பது, வாய்ப்புகளுக்காக காஸ்டிங் ஏஜென்ட், டைரக்டர்களுக்கு தொடர்ந்து கால் செய்வது, சில படங்களுக்கு கையெழுத்து போட்ட பிறகு கடைசி நிமிடத்தில் என் இடத்தில் வேறு ஒருவரை எடுத்துக் கொண்டது, இப்படி எத்தனையோ அனுபவங்களை பார்த்தேன். கடைசியாக சினிமாக்களில் அடி எடுத்து வைத்து இப்போது உங்கள் அனைவரின் மனதிலும் பிரத்தியேகமான இடத்தை சொந்தமாக்கிக் கொண்டேன்.

தைரியம் நம்பிக்கையோடு எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன். கடுமையான உழைப்பால் லட்சியத்தை அடைந்தேன். இந்த பயணத்தில் எல்லா பிரச்சினைகளும் ஒரு அழகான பாடத்தை கற்றுக் கொடுத்தது. குடும்பம் துணையாக இல்லாவிட்டால் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது'' என்றார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் `அயலான்' படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, ``வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஏற்படும் மறக்க முடியாத அனுபவம் இந்தப் படத்தில் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் இந்தப் படத்தில் ஒரு ஏலியன் இருக்கும். படப்பிடிப்பு நடக்கும்போது ஏலியன் இருக்காது. ஆனால் படத்தில் ஒரு ஏலியன் இருக்கிறது என்று மக்கள் நம்பும் விதமாக படம் பிடிக்க வேண்டும். அப்படி இந்த படத்தை செய்தோம். பிரம்மாண்டமான விசுவல் எபெக்ட் உடன் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.உண்மையில் இது ஒரு சிறந்த அனுபவம். படப்பிடிப்பில் நிறைய ஆனந்தமான விஷயங்கள் நடைபெற்றன. இந்தப் படத்தை மிகவும் என்ஜாய் செய்து கொண்டே நடித்தேன்'' என்றார்.


Next Story