அஜித்தை பார்க்க திரண்ட ரசிகர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு


x

நடிகர் அஜித்தை பார்க்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25-ம் தேதி தொடங்கியது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார்.

இந்த நிலையில் ரைபிள் கிளப் மாடியில் இருந்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து அவரை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அவரை பார்க்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story