'தீவிர அரசியலில் ஈடுபடுவேன்' - நடிகை நமீதா


தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - நடிகை நமீதா
x

விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நடிகை நமீதா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்திரியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் நமீதாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினார்கள்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நமீதா நிருபர்களிடம் கூறும்போது, ''திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது குழந்தைகள் நலமாக உள்ளனர். கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன். எனக்கு சினிமாவில் நடிப்பதைவிட அரசியலில் ஈடுபடவே அதிக ஆர்வம் இருக்கிறது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" என்றார்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்றவற்றில் எந்த மாநில அரசியலில் ஈடுபடுவீர்கள் என்று கேட்டபோது, அதுகுறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்றார். நமீதா பா.ஜ.க.வில் உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமான நமீதா அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்தார். சமீபத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.


Next Story