கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்... செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு


கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்... செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 13 April 2024 10:29 AM GMT (Updated: 13 April 2024 12:11 PM GMT)

சேலத்தில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் நடிகை லட்சுமி மேனன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மேடையில் நடனக்கலைஞர்களுடன் குத்தாட்டம் போட, உற்சாகத்தில் மேடையில் ஏறிய ரசிகர்கள் செல்பி எடுத்து கலவரம் செய்திருக்கின்றனர்.

'கும்கி', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.'நான் சிகப்பு மனிதன்', 'ஜிகர்தண்டா', 'கொம்பன்' என இவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்து இவருக்கு கைக்கொடுத்தாலும், நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட காதல் கிசுகிசு சினிமாவில் இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால் சினிமாவிற்கு சில காலம் பிரேக் விட்டார். இப்போது சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார் லட்சுமி மேனன்.

இந்நிலையில், சேலம் அருகே நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நடிகை லட்சுமி மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய பின்பு நடன கலைஞர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டார் லட்சுமி மேனன்.

'கும்கி' படத்தில் இடம்பெற்ற 'சொய்ங்...சொய்ங்...' பாடலுக்கு ஆடியவரை இன்னொரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால், லட்சுமி மேனன் நடித்தப் பிற படங்களில் இருந்தும் பாடல்கள் ஒலிக்கப்பட, நடனமாடி அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். லட்சுமிமேனன் ஆட்டத்தை கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி வந்தனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேடையை நோக்கி வந்தனர். சிலர் மேடையில் ஏறியும் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர்.

காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி ஒரு சில இளைஞர்கள், பெண்கள் மேடைக்கு சென்று செல்பி எடுத்தனர். பின்பு, அங்கிருந்து காவல்துறையினர் உதவியோடு லட்சுமி மேனன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு 'சந்திரமுகி 2' படத்தில் நடித்த லட்சுமி மேனன் இந்த ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் 'சப்தம்' படத்தில் ஆதி, சிம்ரன் மற்றும் லைலாவுடன் இணைந்து நடித்துள்ளார்.


Next Story