துபாயில் தவிக்க விட்டார்... வில்லன் நடிகர் மீது பணிப்பெண் புகார்


துபாயில் தவிக்க விட்டார்... வில்லன் நடிகர் மீது பணிப்பெண் புகார்
x

வில்லன் நடிகர் நவாசுதீன் மீது சப்னா என்ற பணிப்பெண் ஒருவரும் புகார் கூறியிருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர், நவாசுதீன் சித்திக். இந்தியில் முன்னணி நடிகராக உள்ளார். நவாசுதீன் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி அலியா சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

இந்தநிலையில் சப்னா என்ற பணிப்பெண் ஒருவரும் நவாசுதீன் மீது புகார் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வீடியோ வடிவிலான தனது புகாரில், "துபாயில் படித்து வரும் தனது குழந்தைகளை கவனிப்பதற்காக சுற்றுலா விசாவில் என்னை நவாசுதீன் பணியமர்த்தினார். அங்கு தனியார் கம்பெனியில் சேல்ஸ் மானேஜர் பொறுப்பு வகிப்பதாக எனக்கு பணி அனுமதி சான்றிதழும் வாங்கித்தந்தார்.ஆனால் எனக்கு மாத சம்பளம் வழங்கப்படவே இல்லை. குறிப்பிட்ட காலம் முடிந்த நிலையில் நவாசுதீனின் பிள்ளைகள் இந்தியா திரும்பிவிட்டனர். ஆனால் நான் தாயகம் திரும்ப முடியவில்லை. எனக்கு செலவுக்கான தொகையும் வழங்காமல் அவர் கைவிட்டு விட்டார். உணவு இல்லை, கைச்செலவுக்கு பணமும் இல்லை. சுற்றுலா விசா காலம் முடிவடையும் நிலையில் நான் இப்போது தவிக்கிறேன்.

எனக்கு நிலுவை சம்பளத்தொகை வழங்கிடவும், இந்தியாவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்'', என்று குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே மனைவியால் புகாருக்குள்ளான நவாசுதீன் மீது பணிப்பெண் ஒருவரும் புகார் அளித்திருப்பது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story