சொகுசு கார் விவகாரம்; நடிகர் விஜய் வழக்கில் நாளை தீர்ப்பு


சொகுசு கார் விவகாரம்; நடிகர் விஜய் வழக்கில் நாளை தீர்ப்பு
x

சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது நாளை ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.

சென்னை,

நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தெரிவித்தது.

இதையடுத்து, விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. அதே சமயம் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் தரப்பில் கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.


Next Story