ஓ.டி.டி. தளத்தில் சமந்தா படத்தை வெளியிட தடை


ஓ.டி.டி. தளத்தில் சமந்தா படத்தை வெளியிட தடை
x

ஓ.டி.டி. தளத்தில் சமந்தா படத்தை வெளியிட தடை விதித்து பட நிறுவனத்துக்கு ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்து உள்ளது.

வாடகைத்தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் கதை. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இப்படி வாடகைத்தாய் மோசடி செய்யும் ஆஸ்பத்திரிக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆகி உள்ளது. நிஜமாகவே ஐதராபாத்தில் படத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் ஒரு ஆஸ்பத்திரி இயங்குகிறது. அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் யசோதா படத்துக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

எங்கள் ஆஸ்பத்திரி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யசோதா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.டி.டி.யில் யசோதா படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதிவரை வெளியிட தடை விதித்தும் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டார்.


Next Story