தவறான வதந்திகளால் ராஷ்மிகா வருத்தம்


தவறான வதந்திகளால் ராஷ்மிகா வருத்தம்
x

நான் பேசாத விஷயங்களைப் பற்றி என் மீது விமர்சனங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு சில விஷயங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாங்க முடியாத வேதனையை தருகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் வந்திருக்கிறது. நான் பேசாத விஷயங்களைப் பற்றி என் மீது விமர்சனங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நான் பேசாத விஷயங்கள் தவறாக சென்று எனக்கு எதிராக மாறுவதை பார்க்கிறேன்.

இப்படி வரும் தவறான செய்திகள் ஒருபுறம் சினிமா துறையிலும், இன்னொருபுறம் எனக்கு இருக்கும் நல்ல தொடர்புகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்னோடு எனது உறவினர்கள், நண்பர்களும் இதனால் கவலைப்படுகிறார்கள். என்னை நான் மெருகேற்றிக் கொள்ள என்னை பற்றி வரும் நல்ல விமர்சனங்களை எப்பொழுதும் வரவேற்கிறேன். ஆனால் தேவையில்லாத விமர்சனங்களை நான் எதிர்கொள்ளும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்றார்.


Next Story