'பொன்னியின் செல்வன்-2' படத்தின் பாடல் நாளை ரிலீஸ்


பொன்னியின் செல்வன்-2 படத்தின் பாடல் நாளை ரிலீஸ்
x

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்துக்கும் முதல் பாகம் போன்று வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற 'அக நக' என்ற பாடல் நாளை (திங்கட்கிழமை) மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் திரிஷா கையில் வாளை பிடித்தபடி நிற்க எதிரில் கார்த்தி கண்ணை துணியால் கட்டி முட்டிப்போட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதில் கார்த்தி வந்தியத்தேவனாகவும் திரிஷா குந்தவையாகவும் நடிக்கின்றனர். விக்ரம், ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற 29-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


Next Story